நித்திரவிளை: தாமிரபரணி ஆற்றில் தொழிற்சாலை கழிவு கலந்து வருவதால் குளித்து விட்டு வெளியே வந்த உடன் உடலில் அரிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டத்தின் வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையில் குடிநீர் தேவைக்காக உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில் ஏராளமான குடிநீர் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான பொதுமக்கள் தினமும் காலை மாலை வேளைகளில் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மங்காடு பகுதியில் ஆற்றில் தண்ணீருடன் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் ஆயில் கலந்த மஞ்சள் திரவம் கலக்கிறது. இந்த தண்ணீர் குடிநீர் கிணறுகளில் புகுவதால் உள்ளாட்சி அமைப்புகள் விநியோகம் செய்யும் குடிநீர் மாசுபடுகிறது. இது சம்பந்தமாக பொதுமக்கள் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக மங்காடு ஆற்றின் மேல் பகுதியில் இருந்து ஆயில் கலந்த கழிவு வந்த வண்ணம் உள்ளது, ஆற்றில் இறங்கி குளித்து விட்டு வீட்டுக்கு சென்ற உடன் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. மேலும் அதில் இருந்து ரசாயன நெடி ஏற்படுகிறது. இது முந்திரி தொழிற்சாலை கழிவு போல் தோன்றுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்….