மதுரை, அக். 5: வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய வடிவேல், கடந்த செப்.23ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். அவருடைய உடல் உறுப்புக்கள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. அவரால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. முதல்வர் அறிவிப்பின்படி வடிவேல் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. வடிவேல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றியதால், அவருக்கு பணப்பலன்கள் கிடைக்காது. எனவே, வடிவேலுவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.