மேல்மலையனூர், மார்ச் 19: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் ராஜேஷ் (31), இன்ஜினியரிங் முடித்துவிட்டு மாலத்தீவில் ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் புவனேஸ்வரி (29) என்பவருக்கும் ராஜேஷுக்கும் கடந்த மாதம் 26ம்தேதி திருமண நிச்சயம் விளாப்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி மேல்மலையனூரில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்துக்கு ஒரு மாதம் இருப்பதால் ராஜேஷ் மாலத்தீவுக்கு சென்று விடுமுறை எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார். நிச்சயத்துக்கு பின் புவனேஸ்வரி ராஜேஷிடம் தொடர்ந்து செல்போனில் பேசிவந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேஷிடம், புவனேஸ்வரி கடந்த 14ம்தேதி இரவு செல்போனில் தொடர்பு கொண்டு தான் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபரை காதலிப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து மாலத்தீவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று மரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாலத்தீவு போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தனர். நேற்று சொந்த ஊரான மேல்மலையனூருக்கு ராஜேஷின் உடல் கொண்டுவரப்பட்டு உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது. தன் நண்பரிடம் ராஜேஷ் நடந்த சம்பவத்தை கூறி மனமுடைந்து பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது.