காஞ்சிபுரம், மார்ச் 22: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 133 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று எஸ்பி சண்முகம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ளவர்கள், அவற்றை திரும்ப ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள், போலீசார், அரசியல்வாதிகள் என 144 பேர், தங்களது பாதுகாப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். இதில், வங்கி காவலர்கள் 11 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டநிலையில், 133 பேர் தங்களது துப்பாக்கிகளை, போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் எனவும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படை விரைவில் வரவழைக்கப்படும் என்றும் எஸ்பி சண்முகம் தெரிவித்துள்ளார்.