Monday, June 10, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்

நாடாளுமன்ற தேர்தலில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்

by Karthik Yash

புதுச்சேரி, பிப். 27: கவர்னர் தமிழிசை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட எந்தவொரு வெளிமாநிலத்தை சேர்ந்த வேட்பாளர்களையும் ஆதரிக்க மாட்டார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று கூறுகையில், ஜிப்மர் மருத்துவமனையின் காரைக்கால் கிளையை போதிய மருத்துவர்கள் இல்லாமல், தேர்தலுக்காக அவசர கதியில் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஜிப்மர் நிர்வாகம் சீரழிந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த புதிய திட்டமும் கொண்டுவரவில்லை. புதிய சட்டமன்றம் கட்டும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கும் சபாநாயகர் செல்வத்துக்கும் பணிப்போர் நடந்து வருகிறது. ரூ.612 கோடி செலவில் சட்டசபை கட்ட வேண்டுமா? என்ற தமிழிசையின் கேள்வி நியாயமானதுதான். இது தொடர்பான கோப்புகள் தொடர்பான விவரங்களை வெளியே பேசியதே தவறு. இந்த ஆட்சியில் ஒருங்கிணைப்பு இல்லை. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜகவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை. ஆட்சியாளர்களுக்கும் – துணைநிலை ஆளுநருக்கும் ஒருங்கிணைப்பு இல்லை.

புதுச்சேரி மாநிலம் கஞ்சா நகரமாக மாறிவிட்டது. ரெஸ்டோ பார்களில் போதை ஸ்டாம்ப் விற்கப்படுகிறது. புதுச்சேரியில் பாரம்பரியம், கலாசாரம் சீரழிந்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளால் மக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். நடுத்தெருவில் குடித்து கும்மாளமிடுகின்றனர். போதைப் பொருளை கட்டுப்படுத்த முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அபின், பிரவுன்சுகர், என எங்கு பார்த்தாலும் போதை நகரமாக மாறிவிட்டது. 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை விதியின்படி விடுதலை செய்ய வேண்டும்.

முதலமைச்சர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், புதுச்சேரியில் நடைபெறும் ஊழல்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகவும், நியமன எம்.எல்.ஏ, ராஜ்யசபா எம்.பி பதவி மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜவை நிறுத்துவது என ரங்கசாமி, அனைத்தையும் பாஜகவுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டார். நிர்மலா சீத்தாராமன், தமிழிசை உள்ளிட்ட எந்தவொரு வெளிமாநிலத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை புதுச்சேரி மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.மண்ணின் மைந்தர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். விஜயதாரணி போன்ற அரசியல்வாதிகள் கட்சி மாறுவதென்பது சகஜம். ஊழல், நிர்வாக சீர்கேடு, முறைகேடுகளை தேர்தலில் அம்பலப்படுத்துவோம். எல்லாவற்றுக்கும் ஆதாரம் வைத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெரும், என்றார்.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi