களக்காடு, ஜூன் 3: நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் போலீஸ் சரகம் பெரியநாடார் குடியிருப்பைச் சேர்ந்தவர் சாமி மகன் முத்துகிருஷ்ணன் (41). விவசாயி. இவரது தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் ஏசுராஜ் (19), தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை முத்துகிருஷ்ணன் ஊரில் சொன்னதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பைக்கில் சென்று கொண்டிருந்த முத்துகிருஷ்ணனை வழி மறித்த ஏசுராஜ், திரவியம் மகன் ராஜா, கனகராஜ் மகன் ஜேம்ஸ், சேர்மத்துரை மகன் சிமியோன், சுப்பிரமணியபுரம் அரவிந்த் ஆகியோர் சேர்ந்து முத்துகிருஷ்ணனை தாக்கினர். இதுபோல முத்துகிருஷ்ணனும், ஏசுராஜை தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இருவரும் தனித்தனியாக விஜயநாராயணம் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் முத்துகிருஷ்ணன், ஏசுராஜா உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.