நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 9 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்று மாலை கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 மீனவர்களையும் விசைப்படகுடன் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். காரைக்கால்: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து காரைக்காலை சேர்ந்த 5 பேர் மற்றும் நாகையை சேர்ந்த 8 பேர் என 13 பேர், நேற்றுமுன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தமிழக பகுதியான கோடியக்கரைக்கு தென்கிழக்கே ஆழ்கடலில் அன்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல் காரைக்கால் மற்றும் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்ததோடு, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 13 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களது விசைப்படகை பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைதான 22 மீனவர்களையும் பருத்தித்துறை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனைக்குப்பின் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையினரால் காரைக்கால், நாகை மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….