நாகப்பட்டினம், மே 14: நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மீண்டும் தலைமை மருத்துவமனை இயங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பல ஆண்டு காலமாக அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் ரூ.360 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இதன் பின்னர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு கடந்த 2022ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கியது. இதற்காக நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனை தற்காலிகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நிறைவு பெற்றவுடன் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு,க..ஸ்டாரின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்டவைகள் ஒரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லு£ரிக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. வெளி நோயாளி பிரிவுகள், மகப்பேறு மட்டும் நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல ஆண்டு காலமாக நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்ட அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் இயங்க வேண்டும். இதை விட்டு நாகப்பட்டினத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யக்கூடாது.
நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் அரசு தலைமை மருத்துவமனை இயங்க வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து மருத்துவ வசதிகளும் நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு தலைமை மருத்துவமனையிலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி முழுவதும் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து பெறும் இயக்கம் நேற்று(13ம் தேதி) தொடங்கப்பட்டது.
முதல் கட்டமாக நாகப்பட்டினம் நகர பகுதியில் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து வாங்குவது, இதை தொடர்ந்து வரும் 19ம் தேதி வரை பொதுமக்களை சந்தித்து கையொப்பம் பெறுவது. இவ்வாறு பெறப்பட்ட கையெழுத்து பிரதிகளை தமிழ்நாடு முதல்வர், மருத்துவத்துறை அரசு செயலாளர் ஆகியோரை சந்தித்து விரைவில் கொடுக்கப்படவுள்ளது.