நாகப்பட்டினம்,ஜூன்22: நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தனியாக சுற்றுலா விடுதியுடன் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நாகப்பட்டினம் வந்தார். அவருடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தவைர் மாரிமுத்து ஆகியோர் வந்தனர். அப்போது நாகப்பட்டினம் தோணித்துறை சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக மூடி கிடக்கும் தமிழ்நாடு ஓட்டல் கட்டிடத்தை பார்வையிட்டார். பின்னர் அலுவலகம் உள்ளே சென்று ஆய்வு நடத்தினர். அலுவலகத்தின் வரவேற்பு அறை, உள்ளறைகள், வளாகம் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமாரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து அருகில் உள்ள நகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் கொடிமரம் பூங்காவை பார்வையிட்டார். சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், கவுன்சிலர் அண்ணாதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.