மீரட்: வருகிற 26ம் தேதி, டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் 9 ரயில்நிலையம், 7 கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்ட மிரட்டல் கடிதம், உத்தரபிரதேச போலீசுக்கு வந்துள்ளது. அதனால், சம்பந்தப்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள சிட்டி ரயில் நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் தபால் மூலம் அச்சுறுத்தல் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில், ‘மீரட் உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் வரும் 26ம் தேதி மற்றும் டிசம்பர் 6ம் தேதிகளில் ெவடிகுண்டை வெடிக்க செய்வோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ஜி.ஆர்.பி ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து மீரட் நகர ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஆர்.பி.சிங் கூறுகையில், ‘சிட்டி ரயில் நிலையத்திற்கு சாதாரண கடிதம் வந்தது, அதில், 9 ரயில் நிலையங்கள், 7 முக்கிய கோயில்கள் மீது குண்டு வீசப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிகாதிகளின் மரணத்திற்கு நிச்சயமாக பழிவாங்குவோம் என்றும், நாங்கள் இந்தியாவை அழிப்போம் என்றும் எழுதப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி காசியாபாத், ஹாபூர், மீரட், முசாபர்நகர், அலிகார், குர்ஜா, கான்பூர், லக்னோ, ஷாஜஹாபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மீது குண்டு வீசப்படும். டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் உள்ள ஹனுமன்காரி, ராமஜென்மபூமி, அலகாபாத், காசியாபாத், மீரட், முசாபர்நகர், சஹரன்பூர் பகுதிகளில் உள்ள கோயில்கள் மீது குண்டு வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோன்று மூன்று வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளன. அச்சுறுத்தல் கடிதத்தை தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஜி.ஆர்.பி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.பி.எப் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் ரயில் நிலையங்களில் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தீவிரவாத அமைப்புகளின் பெயரில் தீபாவளிக்கு முன்பே கடிதம் வந்தது.அந்த கடிதத்தில் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் பெயரும், அதன் தலைவன் முகம்மது அமீம் ஷேக் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான் ஆதரவு, லஷ்கர் -இ -ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத் போன்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன’ என்றார். உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….