கீழக்கரை, ஜூலை 16: வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை அட்மா திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேர்வான நல்லாங்குடி கிராமத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் சிறுதானிய பயிர்களின் நன்மைகள், மண்வளம், மண்வள மேலாண்மை, மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல், உரம் மேலாண்மை, மற்றும் உழவன் செயலியின் நன்மைகள், வேளாண்மை துறை மானிய திட்டங்கள் குறித்து பேசினார். சிறு தானிய மேலாண்மை குறித்து வேளாண் அறிவியல் பேராசிரியர் சிவக்குமார் விளக்கமளித்தார்.
சிறு தானிய பயிர்களான கம்பு, குதிரை வாலி, வரகு, சாமை, திணை, கேழ்வரகு இவற்றினை பயிரிடுவதின் மருத்துவ குணங்கள் குறித்து அட்மா திட்ட மாவட்ட துணை வேளாண் இயக்குநர் முருகேசன் பேசினார். தோட்டக்கலை துறையின் மானிய திட்டம், காளான் வளர்ப்பு குறித்து தோட்டக்கலை உதவி அலுவலர் ரஞ்சித் எடுத்துரைத்தார். மேலும் வேளாண் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க ஊராட்சி தலைவர் சக்திவேல் விவசாயிகளிடம் வலியுறுத்தினார். உதவி வேளாண் அலுவலர் பழனி, உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோசப் ஏற்பாடு செய்தனர்.