மயிலாடுதுறை, பிப்.13: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் எஸ்பி மீனா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நமக்குள் இருக்கும் மனத்தடைகளை உடைக்க வேண்டும். எதை பற்றியும் நமக்கு பயம் இருக்கக் கூடாது. வளர்ச்சியை மட்டுமே நாம் குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கான ஒரு வளர்ச்சிக்கான ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல விதமான ஆற்றலையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதில் எதுவாக இருந்தாலும் எடுத்தவுடன் எதிலும் நாம் வெற்றியை உடனே அடைய முடியாது.
அதுபோல், எதையும் நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் போது வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. எந்த பணியை செய்தாலும் அதை முழு முயற்சியுடன் செய்ய வேண்டும். அப்போது தான் நமக்கு வெற்றியானது கிடைக்கும். நம்மை எப்படி மேம்படுத்தி கொள்வது, அதை எப்படி வழிநடத்தி கொண்டு செல்வது. என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நம் ஆழ்மனதில் நாம் என்னவாக வேண்டும். அதை எப்படி செயல்படுத்த வேண்டும். அதற்கு எப்படி உழைக்க வேண்டும் என்று அதை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும். நமக்கென்று ஒரு தனி ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தகுந்தாற்போல், நமது பழக்க வழங்கங்களை மாற்றி சீக்கிரமாக எழுவது, படிப்பதாக இருக்க வேண்டும். அதற்கு, இதுபோல் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கி சென்று, வாசிப்பு திறனை அதிகப்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.