சிவகங்கை, மார்ச் 16: நத்தம் பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்ட்டல் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, சிங்கம்புணரி, இளையான்குடி, திருப்புவனம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய வட்டங்களில் இந்த நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்ட்டல் http://tamilnilam.tn.gov.in/citizen வழியாக விண்ணப்பிக்கலாம். அதனடிப்படையில், விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பட்டா வழங்கப்படும்.
மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை http://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்ட்டல் வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.