ஊட்டி, பிப். 24: மாவட்ட தேசிய பசுமைப்படை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பள்ளி மாணவ, மாணவியர்கள் கேர்ன்ஹில் வனத்திற்கு இயற்கை கல்வி மற்றும் வனவியல் கள பயணத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பில் நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்களுக்கு 3 நாள் இயற்கை கல்வி, வனவியல் களப்பயணம் நேற்று தொடங்கியது.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து பேசி வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமை வகித்து கள பயணத்தை துவக்கி வைத்து மாணவர்கள் மத்தியில் பேசும் போது, சமூகத்தில் சிறந்த சேவை செய்ய கல்விதான் முக்கியம். எந்த துறையிலும் ஆர்வத்துடன் கல்வி பயின்றால் வெற்றியை நிச்சயம். மாணவர்கள் எதிர்காலத்தில் இயற்கை பாதுகாப்பின் நம்பிக்கை, என்றார்.
சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு கருத்தாளராக கலந்து கொண்டு பேசுகையில், நீலகிரி உயிர்ச்சூழல் பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு முக்கியம். சேவை மனப்பான்மை கொண்ட இளைய சமூகம் இயற்கை பாதுகாப்பதில் முன்வர வேண்டும். மேலும் பறவைகளும் விலங்குகளும் எவ்வாறு வனங்கள் அழியாமல் பாதுகாக்க உதவி வருகின்றது என்பதனை மாணவர்களுக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து கேன்ஹில் காப்பு காட்டிற்கு அழைத்து சென்று தாவரங்கள், விலங்குகள், பல்லுயிர் பெருக்கம் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.