உளுந்தூர்பேட்டை, பிப். 7: உளுந்தூர்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் 13 பவுன் செயினை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி காவிரி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருடைய மனைவி சுகன்யா (43). இவர் நேற்று காலை கிழக்கு கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் இதே பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற ஒரு மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் சுகன்யாவின் கழுத்தில் இருந்த 13 பவுன் செயினை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். அவரை சுகன்யா துரத்திக்கொண்டு ஓடியும் பிடிக்க முடியாததால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தா மற்றும் போலீசார் பள்ளியின் சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 13 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.