ஊட்டி, ஆக.30: ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சமூகப்பணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் துரை தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் புஷ்பராஜன் முன்னிலையில் என்எஸ்எஸ் மாணவர்கள் சமூக நலப்பணி மேற்கொண்டனர். பள்ளி வளாகம் முழுவதையும் தூய்மைப்படுத்திய மாணவர்கள், சுற்றிலும் 50 மரக்கன்றுகளை நடவு செய்தனர். தொடர்ந்து சுற்று சூழலை பாதுகாக்க மரங்கள் நடவு செய்வது அவசியம். மரங்கள் நடுவதால் நல்ல மழை பொழிவு இருக்கும். தூய்மையான காற்று கிடைக்கும்.
புவி வெப்ப மயமாதல் போன்றவற்றை குறைக்க மரங்கள் வளர்ப்பது அவசியம். அதேபோல் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். வனங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சசிபூசன், ஜோகி, ராஜ்குமார், வேலாயுதம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். என்சிசி முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.