Saturday, June 1, 2024
Home » நக்சல்களால் கடத்தப்பட்ட கணவரை மீட்க குழந்தையுடன் காட்டுக்குள் சென்ற மனைவி: சட்டீஸ்கரில் பாசப் போராட்டம்

நக்சல்களால் கடத்தப்பட்ட கணவரை மீட்க குழந்தையுடன் காட்டுக்குள் சென்ற மனைவி: சட்டீஸ்கரில் பாசப் போராட்டம்

by kannappan

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நக்சல்களால் கணவர் கடத்தப்பட்ட செய்தி அறிந்த மனைவி, அவரை மீட்பதற்காக தனது இரண்டரை வயது குழந்தையுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி ஆற்றில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பொறியாளராக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த அசோக் பவார் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 11ம் தேதி அசோக் பவாரையும், அவருடன் வேலை செய்த ஊழியர் ஆனந்த் யாதவையும் நக்சல்கள் கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட இருவரையும் நக்சல்கள் அபுஜ்மத் காட்டுப் பகுதியில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. கணவர் கடத்தப்பட்டதை அறிந்த அசோக்கின் மனைவி சோனாலி, மிகுந்த வேதனை அடைந்தார்.  உடனடியாக அவர் தனது 2 மகள்களுக்காக கணவரை விடுவிக்கும்படி நக்சல்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். தொடர்ந்து, உள்ளூரை சேர்ந்த சிலருடைய உதவியுடன் தனது இரண்டரை வயது மகளுடன் கடந்த ஞாயிறன்று அடர்ந்த காட்டுக்குள் கணவரை தேடி சென்றார். இந்நிலையில், அசோக் பவாரையும் ஆனந்தையும் எதுவும் செய்யாமல் நக்சல்கள் நேற்று முன்தினம் மாலை திடீரென விடுவித்தனர். ஆனால்,  கணவரை தேடி சென்ற சோனாலி இன்னும் அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியே வரவில்லை. அவர் உள்ளூர் பத்திரிகையாளர்கள், போலீசாருடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகின்து. இது குறித்து கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பங்கஜ் சுக்லா கூறுகையில், ‘அசோக் பவாரும், ஆனந்த் யாதவும்  பிஜப்பூரில் குட்ரு காவல் நிலையத்தில் இருக்கின்றனர். சோனாலி விரைவில் குட்ரு வந்து தனது கணவரை சந்திப்பார்,’ என்றார். கணவரை மீட்க மனைவி நடத்தி வரும் இந்த பாசப் போராட்டம், அனைவரையும் நெகிழச் செய்துள்ளது….

You may also like

Leave a Comment

6 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi