தஞ்சாவூர், ஜூலை 20: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மற்றும் நகரம் தேரடி தெருவில் ரோஜா நகை கடை நடத்தி வந்த உரிமையாளர் பிச்சைக்கண்ணு மகன் ராஜசேகர் (62). இவர் ஜூன் 25ம்தேதி செட்டியக்காடு என்ற இடத்தில் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் செல்லும் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை நடத்த தஞ்சாவூர், மாவட்ட கலெக்டர் ஆணையிட்டுள்ளார் அதன்படி விசாரணை பட்டுக்கோட்டை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 25ம்தேதி மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டை, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவரால் நடத்தப்பட உள்ளது.
எனவே, ராஜசேகர் என்பவரின் மரணத்தில் காவல்துறையினரின் துள்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் அத்து மீறல்கள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விவரங்கள் தெரிவிக்க விரும்புகிறவர்கள், மேற்படி நாட்களில் பட்டுக்கோட்டை, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவரிடம் நேரில் சாட்சியம் அளிக்கலாம் என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. சாட்சியம் அளித்த தகவல்களுக்கான ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.