ஆறுமுகநேரி, டிச.16: தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சி 1வது வார்டில் மழைநீர் தேங்கிய பள்ளமான இடங்களில் நகராட்சி சார்பில் மணலை கொட்டி நிரப்பும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக அப்பகுதியில் நகராட்சி சார்பில் மணல் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வகுமார்(33) என்பவர் ஜேசிபி டிரைவரை மிரட்டி மணலை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று கொட்டி வைத்துள்ளார்.
இது குறித்து ஜேசிபி டிரைவர் சுரேஷ், நகராட்சி பணி மேற்பார்வையாளர் ஜான்சிராணி ஆகியோர் நகராட்சி ஆணையர் குமார்சிங்கிடம் புகார் அளித்தனர். இதையடுத்து நகராட்சி ஆணையர் குமார்சிங், ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்எஸ்ஐ செல்லத்துரை வழக்கு பதிவு செய்தார். எஸ்.ஐ.தமிழ்ச்செல்வன் விசாரணை நடத்தி செல்வக்குமாரை கைது செய்தார். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த மணல் கைப்பற்றப்பட்டது. செல்வகுமாரின் தாய் மாரீஸ்வரி காயல்பட்டினம் நகராட்சி 1வது வார்டு கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.