பாலக்காடு, ஜூன் 21: பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே கால்ச்சாடி பூஞ்சேரி மலையடிவாரத்தில் ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை கண்டு தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி உயிர்தப்பினர். பாலக்காடு மாவடட்டம் நெம்மாராவை அடுத்த கால்ச்சாடி காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. இந்த ரப்பர் தோட்டத்திற்கு டேப்பிங் தொழிலாளர்கள் சகாதேவன், சித்தீக், ராஜன் ஆகியோர் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றனர். அப்போது, சிறுத்தை ஒன்று இரண்டு குட்டிகளுடன் ரப்பர் தோட்ட பகுதியில் இருப்பதை பார்த்து அலறி அடித்து ஓடியதில் கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவலறிந்த திருவழியோடு வனத்துறை செக்ஷன் அதிகாரி அபிலாஷ் தலைமையில் வனத்துறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து உணவு, தண்ணீர் இல்லாமல் உடல் சோர்வுடன் இருந்த குட்டியை கூண்டு வைத்து பிடித்தனர். இன்று திருச்சூர் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு குட்டியை கொண்டு சென்றுபின் தீவிர சிகிச்சை அளிப்பதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தனர். தாய், குட்டி சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.