திருப்பூர், ஏப்.20: நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தது. மேலும், வாக்களிக்கும் நாளன்று நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் வாக்களிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பஸ் மற்றும் ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர். இதனால் தொழிலாளர்கள் இல்லாமல் திருப்பூரில் வாகன போக்குவரத்து நேற்று குறைந்து காணப்பட்டது. அதேபோல் பல்வேறு பனியன் நிறுவனங்களும் வெறிச்சோடியது.