தொண்டி, ஜன. 26: தொண்டியில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் தொண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவிகள், மகளிர் கல்லூரி ஏதும் இல்லாததால் தங்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. வெளியூர் சென்று உயர்கல்வி பயில்வதில் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளதாக தெரிகிறது. இதனால் தொண்டியில் மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்க தலைவர் சுலைமான் கூறும்போது, ‘‘தொண்டியை சுற்றியுள்ள கிராமங்களில் நடுத்தட்டு மக்களே அதிகமுள்ளனர். தொண்டியில் மகளிர் கல்லூரி ஏதும் இல்லாததால், மாணவிகள் பள்ளியுடன் படிப்பை நிறுத்துகின்றனர். அவர்கள் உயர்கல்வி பயிலும் வகையில், தொண்டியில் மகளிர் கல்லூரி அமைப்பதுடன், அழகப்பா மாலை நேரக்கல்லூரியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோரி, உயர்கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் மனு அளித்துள்ளோம்’’ என்றார்.