தொட்டியம், ஆக.7: தொட்டியம் அருகே நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இதே ஊரை சேர்ந்தவர் மருதை (32). இருவரது குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் அரிவாளால் தாக்கிக் கொண்டதில் காமாட்சி, சுப்ரமணியன், நந்தினி, மருதை ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அதையடுத்து காயம் அடைந்தவர்கள் தொட்டியம் மற்றும் முசிறி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காமாட்சி மற்றும் நந்தினி ஆகியோர் தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மருதை (32), அருணாசலம் (21), செந்தில் (35), சுப்பிரமணியன் (55), நந்தினி (27), வள்ளியம்மை (30) ஆகிய ஆறுபேர் மீதும், இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த சுப்ரமணியன் (32), துரைமுருகன் (23), ராஜேந்திரன் (52), அண்ணாதுரை (55) ராஜன் (47) ஆகிய ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொட்டியம் அருகே நிலத்தகராறு தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.