ஊட்டி: நீலகிரியில் கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வரும் நிலையில் வனங்கள் பசுமை திரும்புவதால் விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனி பொழிவு காணப்படும். இச்சமயங்களில் மழை பெய்யாமல், பகல் நேரங்களின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.தொடர்ந்து மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடும் வெயில் நிலவும் நிலையில், பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்து போய்விடும். அதேபோல், நீரோடைகளில் முற்றிலும் தண்ணீர் குறைந்து வறண்டு போய் காட்சியளிக்கும். வறட்சியின் காரணமாக, போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம். குறிப்பாக முதுமலை, மசினகுடி உட்பட நீலகிரி வனங்களில் உள்ள விலங்குகள் நீர் நிலைகளைத் தேடி இடம் பெயரும். இதனால், மே மாதம் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காண்பது அரிதாகிவிடும். இச்சமயங்களில், முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் போன்ற பகுதிகளுக்கு விலங்குகளை காண செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பது வழக்கம். கடந்த இரு மாதங்களாக நீலகிரியில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக, அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், வனங்களில் பசுகை திரும்ப துவங்கி உள்ளது. சிறு சிறு புற்கள் மற்றும் செடிகள் துளர்க்கத் துவங்கி உள்ளன. நீரோடைகளிலும் தண்ணீர் ஓடத் துவங்கி உள்ளன. இதனால், ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் சாலையோரங்களில் காட்டு யானைகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் போன்ற விலங்குகள் கடந்த சில நாட்களாக கண்ணில் தென்பட துவங்கியுள்ளன. இதுமட்டுமின்றி, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், விவசாய நிலங்களில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளின் தண்ணீர் தேங்கி உள்ளதால், விவசாயிகள் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்….
தொடர் மழையால் வனங்கள் பசுமையானது: வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
previous post