ஊட்டி, மே 23: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்பின், 6 மாதங்களுக்கு மழை பெய்யது. குறிப்பாக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மழை பெய்யாது. இச்சமயங்களில் சமவெளிப் பகுதிகள் போன்று இங்கும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும்.
ஆனால், இம்முறை யாரும் எதிர்பார்க்காத நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கிய நாள் முதலே ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இதனால், மலர் அலங்காரங்களையும், பூங்காவையும் சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.