கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள கம்பம்மெட்டு, குமுளி மற்றும் போடிமெட்டு வழியாக பல்லாயிரக்கணக்கான கூலித்தொழிலாளிகள் கேரளாவில் ஹை ரேஞ்ச் எனப்படும் ஒண்ணாம் மைல், ஆமையார், அன்னியார் தொழு, நெடுங்கண்டம் பகுதிகளில் ஏலத்தோட்டத்திற்கு தினக்கூலியாக சென்று வருகின்றனர். இவர்களுக்கு போக்குவரத்து செலவு போக தினசரி 300 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கென உள்ள கங்காணி தலைமையில் பணம் ஏலத்தோட்ட முதலாளிகளிடம் இருந்து பெறப்பட்டு ஜீப் வாடகை போக மீதி தொழிலாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப், கூடலூர், கம்பம், புதுப்பட்டி, பாளையம், தேவாரம் மற்றும் கம்பத்தை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்களும் சிறிய அளவில் ஆண்களும் சென்று வருகின்றனர். இதனால் தேனி மாவட்ட தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரம் குறைவின்றி இருக்கும். வழக்கமாக ஏலக்காய் சீசன் வருடத்தில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்ககூடிய மே மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை காணப்படும். ஆனால் இடுக்கி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடந்த ஜனவரியில் தொடர் மழை பொழிந்ததால் இந்த வருடம் சீசன் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. அதேபோல இந்த வருடம் எதிர்பார்த்ததை விட அதிகளவு மழை பெய்ததால் ஏல செடியில் அதிகமான ஏலக்காய் பிஞ்சுகள் பூக்க தொடங்கியுள்ளன. இதனால் ஏலத்தோட்ட விவசாயிகளும், கூலி தொழிலாளிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்தாலும் ஏலக்காய் விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவாக உள்ளதால் ஏல விவசாயிகள் ஒரு புறம் கவலை அடைந்துள்ளனர். தற்போது ஏலக்காய் ரூ.1500 முதல் 1750 வரை விற்பனை ஆகிறது. ஆனால் எப்படி இருந்தாலும் இந்த வருடம் முழுவதும் வேலை கிடைத்துள்ளதால் கூலி தொழிலாளிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்….