நிலக்கோட்டை: நிலக்கோட்டை பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக குளங்கள் நிரம்பின. இந்த குளத்தில் இருந்து வெளியேறி சாலையில் துள்ளி குதித்து ஓடிய மீன்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்து சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழை காரணமாக அப்பகுதியிலுள்ள குளம், குட்டை, ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நிலக்கோட்டை பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் இருந்த குளங்கள் நிரம்பி மழைநீர் செம்பட்டி-நிலக்கோட்டை சாலை வழியாக வெளியேறியது. இந்த நீரில் குளத்தில் இருந்த மீன்களும் வெளியேறி சாலையில் துள்ளிக் குதித்தது. இதனைபார்த்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேலை மற்றும் வலைகளை கொண்டு சென்று சாலையில் துள்ளிக் குதித்து ஓடிய மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….