தேவாரம், மார்ச் 26: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உத்தமபாளையம், சீலையம்பட்டி, கம்பம், காமயகவுண்டன்பட்டி, சின்னமனூர், குச்சனூர், உள்ளிட்ட ஊர்களில் நாட்டு கோழிகள் வளர்ப்பதை பலர் தொழிலாக செய்துவந்தனர். நாட்டு கோழி வளர்ப்பில் விவசாய தொழிலாளர்கள் ஊக்குவிக்கப்படடனர். இரண்டு போகம், நெல் தடையின்றி விளைந்தபோது, நாட்டு கோழி வளர்ப்பதை தொழிலாக கொண்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்தனர்.
நாட்டு கோழிகளை பாதுகாக்க செட்கள் அமைத்து இருந்தனர். விவசாய தொழிலாளர் குடும்பங்களில் 20 கோழிகள் வரை வளர்த்து வந்தனர். நாட்டு கோழி முட்டைகளையும், உள்ளூரில் கிராக்கியான விலையில் விற்றுவந்தனர். கம்பம் பள்ளத்தாக்கு முழுவதும் லட்சக்கணக்கான நாட்டு கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தது.
ஒரு முட்டை உள்ளூர் அளவிலேயே ரூ.10 முதல் 12 வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போதோ வீடுகளில், தனியார் நிலங்களில், தோட்டங்களில் கோழி வளர்ப்பு குறைந்துவிட்டது. கோழிகளை தொடர்ச்சியாக கண்காணித்து பராமரிக்காததால் முட்டைகள் உற்பத்தியும் குறைய தொடங்கி உள்ளன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு முக்கியமானதாகவும், அதிக லாபம் தரக்கூடியதாகவும் உள்ள கோழிவளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.