தேவாரம், மே 3: தேவாரம் காவல்நிலையம் செல்லும் 3 வழிசாலையில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தேவாரம் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. மாநில நெடுஞ்சாலை, மாவட்டசாலை, கிராமசாலைகள் இவ்ஊரில் ஒருசேர அமைந்துள்ளதால் எல்லா சாலைகளிலும் பரபரப்பாக உள்ளது. தேவாரத்தில் இருந்து வெளியூர் செல்வதற்கான போக்குவரத்து சாலைகள் பலவாறாக பிரிகிறது. இதில் தேவாரம்-மூணான்பட்டி சாலை, மைதான சாலை, போடி-உத்தமபாளையம் செல்லும் மாநிலநெடுஞ்சாலை உள்ளிட்டவை எப்போதுமே போக்குவரத்து வாகனங்களால் பிஷியாக காணப்படுகின்றன.
கம்பம், போடி, சின்னமனுர், தேனி, உள்ளிட்ட ஊர்களில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகள், மற்றும் உள்ளூரில் உள்ள பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் காலை, மாலை ஒரே நேரத்திலேயே வாகனங்களில் வருகின்றனர். இதனால் இங்குள்ள 3 வழிச்சாலையாக உள்ள போடி சாலை, உத்தமபாளையம் சாலை, தேவாரம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை போன்றவை அடிக்கடி வாகன நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதில் லாரிகள், தனியார் ஜீப்கள், கார்கள், டூவீலர்கள் என அதிகமானஅளவில் சாலைகளில் பயணிக்கின்றன.
இதனால் பெரும் நெருக்கடி உண்டாகிறது. மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களும் அதிகமான வேகத்தில் வருவதால் பள்ளிவாகனங்கள் தடுமாறித்தான் நெடுஞ்சாலையில் பயணிக்கிறது. எனவே மாலை நேரங்களில் உள்ளூர் போலீசார் பஸ்ஸ்டாண்ட் செல்லும் சாலை, போடி செல்லும் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினால் எந்தவிதமான பிரச்சனையும் வராது. விபத்துக்களும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே இங்கு தானியங்கி போக்குவரத்து சிக்னல் லைட் அமைக்கப்படவேண்டும்.
குறிப்பாக போடி செல்லும் சாலையில் தேவாரம் காவல்நிலையம் அருகே செல்லக்கூடிய வாகனங்கள் வசதியாக தானியங்கி போக்குவரத்து சிக்னல் லைட் அமைக்கப்படவேண்டும். இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், அதிக போக்குவரத்து நிறைந்த காவல்நிலையம் போடி செல்லும் சாலை, உள்ளூர் போக்குவரத்தில் சிக்கி தவிக்கும் உத்தமபாளையம்-மாநில சாலை போன்றவைகளில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்லைட் அமைக்கப்படவேண்டும். இதனால் வாகன நெரிசல் ஏற்படாமல் இருப்பதுடன், விபத்துக்களும் தவிர்க்கப்படும் என்றனர்