தேவதானப்பட்டி, செப். 14: தேவதானப்பட்டியில் இருந்து ஆண்டிபட்டிக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் புறவழிச்சாலையை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வட மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வரவேண்டும் என்றால் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி வழியாக வர வேண்டும். இதில் தேவதானப்பட்டியில் இருந்து வைகைஅணை, ஆண்டிபட்டி மற்றும் க.விலக்கு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவேண்டும் என்றால், தேவதானப்பட்டியில் இருந்து டி.வாடிப்பட்டி, கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், வழியாக வைகைஅணை மற்றும் ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர்.
இதில் தேவதானப்பட்டியில் இருந்து டி.வாடிப்பட்டி, கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி வழியாக சென்றால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. தேவதானப்பட்டியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் சென்று தர்மலிங்கபுரம் என்ற இடத்தில் இருந்து புறவழிச்சாலை வழியாக ஜெயமங்கலம், வைகை அணை செல்லலாம். இந்த புறவழிச்சாலை வழியாக சரக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்த போலீசார் அறிவுறுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.