சிவகங்கை, மார்ச் 20: தேர்தல் பணியை தவிர்க்கும் வகையில் விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19ல் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. போலீசார் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் ஏதேனும் ஒரு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இப்பணியை தவிர்க்கும் பொருட்டு மருத்துவ விடுப்பில் செல்ல முயலும் தகவல் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மருத்துவ விடுப்பில் செல்ல முயன்றால் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக மருத்துவக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். மருத்துவக்குழுவிடம் இருந்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை பெற வேண்டும். அறிக்கையில் சம்பந்தப்பட்ட ஊழியர் தேர்தல் பணியில் ஈடுபட தகுதியானவர் என தெரிய வந்தால் அவர் மீது அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.