சிவகங்கை, ஏப். 21: சிவகங்கை மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 16 அன்று வெளியானதற்கு முன்பிருந்தே தேர்தல் பணிகளை முக்கிய அரசியல் கட்சியினர் தொடங்கினர். அறிவிப்பு வெளியான பின்னர் பிரசாரத்தில் கவனம் செலுத்தினர். தேர்தல் அறிவிப்பிற்கு முன்பிருந்தே கடும் வெயில் கொளுத்த ஆரம்பித்தது. பகலில் வெளியில் நடமாட முடியாத நிலையிலும் பிரசாரம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சிலர் காலை, மாலை மட்டும் என பிரசாரம் செய்ய திட்டமிட்டாலும் அத்திட்டம் வெற்றி பெறாமல் முழுமையாக நாள் முழுவதும் அலைந்து பிரசாரம் செய்தனர். கடுமையான வெயிலால் வேட்பாளர்கள் மட்டுமின்றி கட்சியினரும் கடும் அவதியடைந்தனர். இருப்பினும் வெயிலில் அலைந்து பிரசாரம் செய்து முடித்தனர்.
தற்போது வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒன்றரை மாதம் உள்ளது. கட்சியினர் தேர்தல் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் சுற்றுலா இடங்களுக்கு செல்கின்றனர். கொடைக்கானல், ஊட்டி, கோவை உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து அங்கு சென்றுள்ளனர். சில வசதியான பிரமுகர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.