விருதுநகர், ஆக.12:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். கலெக்டர் பேசுகையில், மனிதன் உண்ணும் உணவு பொருட்களில் 70 சதம் மகரந்த சேர்க்கைக்கு பூச்சிகளை சார்ந்திருக்கிறது. உலகில் பூச்சி இனங்கள் இல்லையென்றால் உணவு உற்பத்தி பாதிப்பு உண்டாகும். மனிதருக்கு ஏற்படும் நன்மைகளை நாம் இன்னும் பயன்படுத்திக் கொண்டால் ஒவ்வொரு விவசாயியும் சிறப்பாக செயலாற்ற முடியும். அதில் ஒன்று தான் தேனீ வளர்ப்பு.
தேனின் மருத்துவத்தை சித்தா போன்ற அனைத்து மருத்துவமும் வெளிப்படுத்துகிறது. தேனுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. தேனீ வளர்ப்பை முறையாக தொடர்ச்சியாக செய்யும் பட்சத்தில் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற முடியும். மாவட்டத்தில் பல்வேறு விவசாயிகள் தேனீ வளர்ப்பு முறையை சிறப்பாக செய்துவருகின்றனர். அதை சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்த வேண்டும். தரமான தேன்களுக்கு தேவை அதிகம் உள்ளது. தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ள தனிநபர்கள் தேனீ வளர்ப்புக்கு இருக்கும் புதிய திட்டங்கள் மற்றும் மானியங்களை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்றார்.