தேனி, மார்ச் 24: தேனி பழைய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன 45 கிலோ பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராகவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தேனி நகர் பழைய பஸ்நிலையம் பகுதி மற்றும் மதுரை ரோட்டில் உள்ள பழக்கடை மற்றும் குளிர்பானக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, இரண்டு கடைகளில் கெட்டுப்போன 45 கிலோ எடையுள்ள அழுகிய பழங்கள் மற்றும் காலாவதியான பேரிச்சை பழ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.