ஆண்டிபட்டி, ஜன. 31: ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தின் சார்பில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலசங்கர் தலைமையில் மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக தொழுநோய் குறித்து விழிப்புணர்வு வாசகங்களை கோசமிட்டு சென்றனர். பின்னர் தொழுநோய் கடைபிடிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
மருத்துவர்கள் மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கையில், தொழுநோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். மாணவிகள், அவர்கள் நண்பர்களிடம், உறவினரிடம் தொழு நோயினால் ஏற்படும் பாதிப்பு, விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். தொழு நோயாளிகளுக்கு ஊன்றுகோல், காலணி, கண்ணாடி மருத்துவ பொருட்கள், போர்வைகள் வழங்கப்பட்டது. இதில் மருத்துவர்கள் ராஜபிரகாஷ், செல்வகுமார், சந்திரா, மணிமொழி, ஈஸ்வரன், அமுதா, பாலசவுந்தர், வித்யா, மற்றும் தர்மேந்திர கண்ணா, வேல்முருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.