ஆண்டிபட்டி, செப். 12: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 227 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மதுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) முகமதுஅலி ஜின்னா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.