ஆண்டிபட்டி, செப். 14: கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா 2023யை முன்னிட்டு 2ம் கட்டமாக க.விலக்கு பகுதியில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வரும் 16ம் தேதி காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணி சிறப்பு வரை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இச்சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குதல், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் செயல்படவுள்ளது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.