போடி: தேனியில் இருந்து போடி வரை அகலரயில்பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. போடியிலிருந்து மதுரைக்கு 90 கிலோ மீட்டர் தூரம் தென்னக ரயில்வே துறையின் சார்பில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. வேகத்தை அதிகப்படுத்தி அதிவேகமாக அதாவது 1 மணி நேரம் 10 நிமிடத்திற்குள் போடியிலிருந்து மதுரை சென்றடையும் விதமாக குறுகிய ரயில் பாதையை மாற்றி அமைக்க அகல ரயில் பாதை திட்டம் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் முடிவு செய்தது. அதன்படி 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியோடு குறுகிய ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அகல ரயில்பாதை திட்டப்பணி 6 ஆண்டுகள் கழித்து துவக்கி மதுரையிலிருந்து தேனி வரை விரைந்து முடிக்கப்பட்டது. அண்மையில் சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை-தேனி இடையே ரயில் சேவையை துவக்கி வைத்தார். தேனியிலிருந்து மதுரை வரை காலையும் மாலையும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தேனியிலிருந்து போடி வரை 16 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில்வே தண்டவாளம் அமைப்பதற்கான பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகிறது. தேனி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து போடி மார்க்கமாக வளையப்பட்டி வரை 6 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதைக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பூதிப்புரம், துரைராஜபுரம் காலனி, அணைக்கரைப்பட்டி பகுதியில் கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அகல தண்டவாள ரயில்வே பாதை அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இப்பணிகள் பல மாதங்களை கடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போடியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளிலும் கட்டிட பணிகள் நடந்து வருகிறது….