விருதுநகர், ஜன. 22: டெல்லியில் தேசிய அளவிலான ரோபோட்டிக் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 1,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடந்த மாதம் நடந்த மாநில அளவிலான தேர்வில் விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி தாரணி, 8ம் வகுப்பு மாணவி தக்ஷனா ஆகியோர் தேர்வு பெற்று தேசிய அளவிலான இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
இந்த மாணவிகள் தேசிய அளவிலான போட்டியில் காட்டு விலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து மக்களுக்கும் விளை நிலங்களுக்கும் இடையூறு விளைவிப்பதை தடுக்கவும், காட்டு தீயினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, காடுகளில் இருந்து மரங்கள் கடத்துவதை தடுக்கும் வகையிலான ‘வன பாதுகாப்பு கண்காணிப்பு கருவி’யை ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்து செயல்விளக்கம் செய்து காட்டினர்.
இதன் மூலம் தேசிய அளவில் 3ம் பரிசாக வெண்கலப்பதக்கத்தை வென்றனர். இதற்கான வழிகாட்டுதல்களை பள்ளி அடல் ஆய்வக பயிற்சி ஆசிரியைகள் சங்கீதா, சுதாமணி, வைஷ்ணுதேவி அளித்திருந்தனர். சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்தினர்.