கும்பகோணம்: கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் ராமசாமி கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள 5 முக்கிய வைணவத் தலங்களில் ஒன்றான ராமசாமி கோயில் தென்னக அயோத்தி என போற்றப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான நேற்று ராமநவமியை முன்னிட்டு உற்சவர் ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் சமேதராய் திருத்தேரில் எழுந்தருள யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் ஆகியவை முன்செல்ல, கேரள செண்டை மேளம் முழங்க, திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்….