தூத்துக்குடி, மார்ச் 22: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 2வது நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வராததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை கலெக்டர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமிபதியிடம் அளித்து வருகின்றனர். முதல்நாளில் தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காட்டை சேர்ந்த சிவநேஸ்வரன் மற்றும் குரும்பூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் 2ம் நாளான நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராத நிலையில் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.