சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இது குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம் 2018 செப்டம்பரில் தமிழக அரசு முதன்மைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து அடுத்த மாதமே வழக்கை முடித்து வைத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை மற்றும் தமிழக அரசு முதன்மை செயலரின் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக பொதுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், 718 சாட்சிகளை விசாரித்து 1,126 ஆவணங்களை பதிவு செய்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….