தூத்துக்குடி,ஜூன்24: தூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ₹ 1.45 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தட்டி(50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி (43). இவர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் உறவினரின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன் தினம் மாலை வீடு திரும்பினர். அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த ₹1.45 லட்சம் பணம் திருடு போயிருந்ததது. இதுகுறித்து புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.