ஸ்பிக்நகர், ஜன.8: தூத்துக்குடி அடுத்த ஸ்பிக்நகர் அருகே அத்திமரப்பட்டியில் தொழிலாளியை கட்டையால் சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடி அடுத்த ஸ்பிக்நகர் அருகேயுள்ள அத்திமரப்பட்டி மேல தெருவைச் சேர்ந்த சேர்மத்துரையின் மகன் வெங்கடேசன் (18). கட்டிடத் தொழிலாளியான இவர் அத்திமரப்பட்டி பகுதியில் பைக்கில் வேகமாக சென்றாராம். இதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த செம்புலிங்கம் மகன் சிவலிங்கம் (37) என்பவர் தட்டிக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிவலிங்கம் கீழே கிடந்த கட்டையால் வெங்கடேசனை சரமாரியாக தாக்கினாராம். இதில் காயமடைந்த வெங்கடேசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீசார், கட்டையால் தாக்கிய சிவலிங்கத்தை கைது செய்தனர்.