ஆவடி: ஆவடி அருகே மின்கசிவால் துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆவடி அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மெயின் ரோட்டில் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் 8 வருடங்களாக துணி கடை நடத்தி வருபவர் காஜா மொய்தீன். இந்நிலையில், நேற்று இவரது மாடியின் இரண்டாவது தளத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. உடனடியாக அங்கிருந்த கடை ஊழியர்கள் தப்பி வெளியே சென்றனர். பின்னர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….