உளுந்தூர்பேட்டை, பிப். 29: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆண்டிக்குழி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் ஆறுமுகம் (34). விவசாய கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் திடீரென கூரை வீட்டில் ஏற்பட்ட தீயானது காற்றில் மள, மள என பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த ஆறுமுகம் மற்றும் மனைவி, குழந்தைகள் வீட்டிலிருந்து அலறி அடித்து வெளியே வந்தனர். அதற்குள் தீ வேகமாக பரவி கூரை வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்கள் எரிந்து தீயில் கருகியது. இந்த தீ விபத்து சம்பவம் மின் கசிவினால் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து திருநாவலூர் காவல்நிலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.