டெல்லி: சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இந்திய தீவிரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பிரபல தாதாக்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய வடமாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு குழுக்களுடன், அந்தந்த மாநில போலீசாரும் ஒருங்கிணைந்து சோதனைகளை நடத்தினர். இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த மாதம் 12ம் தேதி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பகுதிக்கு உட்பட்ட 50 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு பதிவு செய்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், தீவிரவாத ஆதரவாளர்கள், தாதாக்கள், கடத்தல்காரர்களின் இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. பாகிஸ்தான், கனடா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளால், சோதனை வளையத்தில் சிக்கியவர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டன….