சென்னை: கேரளாவில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவி இருக்கும் நிலையில், தமிழகத்தில் கோழி பண்ணைகளை கண்காணிக்குமாறு கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு கால்நடைத்துறை இயக்குநர் ஞானசேகரன் உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக எல்லையோர மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் உஷாராக இருக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி மற்றும் அது சார்ந்த உணவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி முதல் நீலகிரி வரையுள்ள எல்லையோர மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளை பார்வையிட்டு தொற்று அறிகுறி இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவலை தடுக்க குறிப்பிட்ட சில பகுதிகளில் கோழி, வாத்து உள்ளிட்டவைகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஹரியானா, ஹிமாசலப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் பரவி ஏராளமான கோழிகள் உயிரிழந்திருக்கின்றன. …