சேந்தமங்கலம், மார்ச் 23: கொல்லிமலைக்கு எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்து செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தளமாக கொல்லிமலை திகழ்கிறது. அடிவாரம் காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் இங்கு, தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்தாண்டு போதிய மழை இல்லாத காரணத்தால், தற்போது கொல்லிமலையில் கடும் வரட்சி நிலவி வருகிறது. வனப்பகுதி முழுவதும் மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து கீழே விழுந்து உள்ளதால், எளிதில் தீப்பற்ற கூடிய சூழல் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அடிவாரம் காரவள்ளியில் உள்ள தனியார் தோட்டத்தில் தீ வைக்கப்பட்டதால், அதன் பொறி வனப்பகுதியில் விழுந்து தீ கொளுந்து விட்டு எரிந்து பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.
எனவே, கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியில் சாலை ஓரங்களில் மது அருந்தக்கூடாது, பீடி, சிகரெட் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் சமையல் செய்யக்கூடாது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பர். அப்போது தடை செய்யப்பட்ட செயல்களில் ஈடுபட்டால், கடும் அபராதம் விதிக்கப்படும் என வனசரகர்கள் பெருமாள், சுகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.