திருவண்ணாமலை, மே 17: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில் 147 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 4,024 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் எதிரொலியாக மாநில முழுவதும் கள்ளச்சாராய சோதனை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில் கடந்த 2 நாட்களாக மாவட்ட முழுவதும் கள்ளச்சாராய சோதனை நடந்தது. இந்த சோதனையில், 254 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 147 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 4,024 லிட்டர் கள்ளச்சாராயம், 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 10 லிட்டர் எரிசாராயம், கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த 1,471 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.